ஈரான் வெளியுறவு அமைச்சர் முகமது ஜவாத் ஜரீஃப்பை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஜேர்மன் நகரமான முனிச்சில் நேற்று சந்தித்துப் பேசினார்.
வருடாந்த மியூனிக் பாதுகாப்பு மாநாட்டின் பங்கேற்கச் சென்ற நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
இந்தப் பேச்சுவார்த்தையின்போது கடந்த ஜனவரி மாதம் உக்ரேனிய பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டமை குறித்து முழுமையான மற்றும் சுயாதீனமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என ஈரான் வெளிவிவகார அமைச்சரிடம் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வலியுறுத்தினார்.
கனேடியர்களுக்கு நான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். சர்வதேச சுயாதீன விசாரணை ஊடாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். இந்தத் தவறுக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை ஈரான் வெளிவிவகார அமைச்சரிடம் வலியுறுத்தியதாக சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார்.
விமானத்தின் கருப்புப் பெட்டியை ஒப்படைக்குமாறு பிரதமர் ட்ரூடோ முன்னர் விடுத்த அழைப்பை ஈரான் நிராகரித்தது. நேற்றைய சந்திப்பில் இதனை மீளவும் வலியுறுத்தியதாக ட்ரூடோ கூறினார்.
ஈரானுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த கனேடிய சட்டத்தரணிகள், விமானம வீழ்த்தப்பட்டதில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு குறைந்தது 1.5 பில்லியன் இழப்பீட்டை ஈரான் வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, மோதல் பகுதிகளுக்கு அருகே பயணிகள் விமானங்கள் பறப்பதைத் தடுக்க சர்வதேச கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். இதற்காக பணியாற்றுவதன் மூலம் சோகத்திலிருந்து சாதகமான முடிவொன்றை எடுக்க விரும்புவதாக பிரதமர் ட்ரூடோ கூறினார்.